ஷா ஆலம், பிப் 6- சட்டவிரோதமான முறையில் குப்பைகளை கொட்டுவோர் குறித்த தகவல்களை அளிக்கும் படி பொது மக்களை கிள்ளான் நகராண்மைக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
குற்றவாளிகள் பிடிபடும் அளவுக்கு தக்க ஆதாரங்களுடன் புகார்களை அளிப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்று நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளது.
சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டுவோர் தொடர்பான புகைப்படங்கள் அல்லது காணொளிகளை 03-33714404 என்ற எண்களில் பகிர்ந்து கொள்ளலாம் என ஆலோசனை கூறியது.
தகுந்த ஆதாரங்களுடன் குற்றம் புரிந்தவர்கள் பிடிபட்டால் தகவல் அளித்தவர்களுக்கு உரிய வெகுமதி வழங்கப்படும் என்று என நகராண்மைக் கழகம் மேலும் குறிப்பிட்டது.
சுற்றுச்சூழல் துறையின் அமலாக்கத் துறையினர் உள்ளிட்ட 25 குழுக்களை தாங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக கூறிய நகராண்மைக் கழகம், சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டும் பகுதிகளில் இரகசிய கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன என்றது.
இவ்வாண்டில் கிள்ளான் மாநகர் அந்தஸ்தைப் பெறவுள்ளது. குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவோரைப் பிடிப்பதில் கிள்ளான் நகராண்மைக் கழகத்திற்கு உதவ வாருங்கள். கிள்ளான் சுத்தம் நிறைந்த நகரமாக உருவாக்குவோம் என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.