ALAM SEKITAR & CUACAECONOMY

25,223 சியான்தான் செடிகளை நட்டு கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் சாதனை

ஷா ஆலம், பிப் 26- கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் 32,223 சியான்தான் எனப்படும் இட்லிபூச் செடிகளை நட்டு மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. நகராண்மை கழக எல்லைக்குட்பட்ட போரெஸ்ட் பார்க், பண்டார் ஹில் பார்க், புஞ்சா ஆலம் ஆகிய இடங்களில் இந்த செடிகள் நடப்பட்டன.

இந்த செடிகளை 1,500 பேர் இரண்டு மணி நேரத்தில் நட்டு முடித்தனர். கடந்த 2014ஆம் ஆண்டு லங்காவியில் இதே மாதிரியான 20,200 செடிகளை நட்டதன் மூலம் புரியப்பட்ட சாதனை இதன் வழி முறியடிக்கப்பட்டது.

அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய மற்றும் நீடித்த வளர்ச்சி கொண்ட நகருக்கான அடையாளமாக திகழக்கூடிய இந்த வகை பூச்செடி கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ செடியாக கடந்த 1978ஆம் ஆண்டு முதல் விளங்கி வருவதாக அதன் தலைவர் ரஹிலா ரஹ்மாட் கூறினார்.

மாநிலத்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள் வாயிலாக ஆண்டுக்கு 52 லட்சம் மரக்கன்றுகள் வீதம் அடுத்த ஐந்தாண்டுகளில் 2 கோடியே 60 லட்சம் கன்றுகளை நடும் மாநில அரசின் இலக்குக்கு ஏற்ப இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.

இந்த சாதனையை நிகழ்த்துவதில் பெரிதும் துணை புரிந்த கோல சிலாங்கூர் வட்டார மக்களுக்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தை கோல சிலாங்கூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர்  ஜூல்கிப்ளி அகமது தொடக்கி வைத்தார்.

இதனிடையே, சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும்  பிரசார இயக்கங்களை தமது தரப்பு தொடர்ந்து நடத்தி வரும் என்றும் ரஹிலா தெரிவித்தார்.


Pengarang :