NATIONAL

ஜொகூர் பாரு சென்று கொண்டிருந்த பயணிகள் இரயிலில் தீ- ஓட்டுநர் காயம்

தானா மேரா, மார்ச் 3- தும்பாட்டிலிருந்து ஜொகூர் பாரு நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் இரயிலில் தீவிபத்து ஏற்பட்டது. நேற்றிரவு தாமான் தாசேக் கியாரா பகுதியில் அந்த இரயில் பயணித்துக் கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்தது.

இச்சம்பவம் தொடர்பில் நேற்றிரவு 10.36 மணியளவில் தங்களுக்கு புகார் கிடைத்ததாகத் தானா மேரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் முகமது ஜூல்கிப்ளி ஓஸ்மான் கூறினார்.

இதனைத் தொடர்ந்து இரு அதிகாரிகள் மற்றும் பத்து உறுப்பினர்கள் அடங்கிய தீயணைப்புக் குழுவினர் இரு தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.

இரவு மணி 10.39 அளவில் சம்பவ இடத்தை அடைந்த போது அந்த இரயிலின் முன்புறப் பகுதியில் தீ கொளுந்துவிட்டு எரிவதை வீரர்கள் கண்டனர். விரைந்து செயல்பட்ட அவர்கள் இரவு 11.00 மணியளவில் தீயைக் கட்டுப்படுத்தினர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த தீவிபத்தில் எக்ஸ்பிரஸ் ராக்யாட் தீமோரான் எனும் அந்த இரயிலின் ஓட்டுநர் காயங்களுக்குள்ளாகி சிகிச்சைக்காகத் தானா மேரா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லபட்டார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த விபத்தில் பயணிகள் யாரும் காயமடையவில்லை என்றும் தீக்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


Pengarang :