ECONOMYMEDIA STATEMENT

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக ஏற்பாட்டில் மீன்பிடிப் போட்டி- வெ.17,000 வரை பரிசு வெல்ல வாய்ப்பு

ஷா ஆலம், மார்ச் 4- அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் ஏற்பாட்டில் மீன் பிடிக்கும் போட்டி தாசேக் பாண்டான் பெர்டானாவில் வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை 3.00 மணி முதல் நடைபெறவுள்ளது.

மொத்தம் 17,000 வெள்ளி பரிசுத் தொகையைக் கொண்ட இப்போட்டியில் ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ள தாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளதாக நகராண்மைக் கழகத்தின் பொது உறவுப் பிரிவு கூறியது.

இப்போட்டியின் பங்கேற்பாளர்களுக்கு 40 வெள்ளி நுழைவுக் கட்டணம் விதிக்கப்படும். முதலில் பதியும் 500 பேருக்கு டி-சட்டைகள் அன்பளிப்பாக வழங்கப்படும் என அது குறிப்பிட்டது.

அம்பாங் ஜெயா வட்டாரத்தின் சூழியல் சுற்றுலா மையமாக தாசேக் பாண்டான் பெர்டானாவை உருவாக்கும் நோக்கில் இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அப்பிரிவு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

இவ்வட்டாரத்தின் பொழுதுபோக்கு மையமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏரியின் வசதிகளை அம்பாங் வட்டார மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கிலும் இப்போட்டி நடத்தப்படுகிறது.

இப்போட்டியின் வெற்றியாளருக்கு 5,00 வெள்ளி ரொக்கப் பரிசும் இரண்டாம் இடத்தைப் பிடிப்பவருக்கு 2,000 வெள்ளியும் மூன்றாம் இடத்தை பிடிப்பவருக்கு 1,000 வெள்ளியும் பரிசாக வழங்கப்படும்.

நான்காம் இடம் முதல் 10ஆம் இடம் வரை பிடிப்பவர்களுக்கு தலா 200 வெள்ளியும் 11 முதல் 30வது இடத்தைப் பிடிப்பவர்களுக்கு 150 வெள்ளியும் 31 முதல் 71வது இடம் வரை பிடிப்பவர்களுக்கு தலா 50 வெள்ளியும் பரிசாக வழங்கப்படும்.

இதுதவிர, அதிர்ஷ்டக் குலுக்கில் வெல்பவர்களுக்கு 40 அங்குல தொலைக்காட்சி மற்றும் மீன்பிடி சாதனங்கள் வழங்கப்படும்.


Pengarang :