லாபிஸ், மார்ச் 10- மாநில அரசின் இரண்டாம் கட்ட கித்தா சிலாங்கூர் பென்யாயாங் உதவிப் பயணத்தின் வாயிலாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லாபிஸ் நகரின் ஒன்பது இடங்களில் 65 டன் குப்பைகளை அகற்றப்பட்டுள்ளன.
ஊராட்சி மன்றங்கள், செர்வ் எனப்படும் தன்னார்வலர் குழு, டீம் சிலாங்கூர், கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 311 பேரடங்கிய நிவாரணக் குழு இந்த துப்பரவு பணிகளை மேற்கொண்டதாக மாநில பேரிடர் மேலாண்மை பிரிவின் நிர்வாகச் சேவைப் பிரிவுச் செயலாளர் முகமது ஹனாப்பி அகமது கூறினார்.
லாபிஸ் மாவட்ட மன்றத்தை மையமாக கொண்ட இந்த மீட்புப் பணிகள் காலை 9.00 மணி தொடங்கி மாலை 6.00 மணி வரை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
மனுக்குல மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் தலைமையிலான இக்குழுவினர் சேகரிக்கப்படும் குப்பைகளை பெக்கான் லாபிசில் உள்ள தற்காலிக குப்பை சேகரிப்பு மையத்திற்கு கொண்டுச் செல்ல 218 பயணங்களை மேற்கொண்டுள்ளன என்றார் அவர்.
நேற்று முன்தினம் தொடங்கப்பட்ட இந்த துப்புரவு இயக்கம் லாபிஸ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளை மையமாகக் கொண்டு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்திற்குப் பிந்தைய துப்புரவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சிலாங்கூர் மாநில நிவாரணப் பணியாளர்களுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நன்றி தெரிவித்துக் கொண்டார்.