ஷா ஆலம், மார்ச் 17- சிலாங்கூர் மாநில பொருளாதார மேம்பாட்டுக் கழக (பி.கே.என்.எஸ்.) குழுமத்திற்குச் சொந்தமான முதல் மருத்துவமனையான செல்கேட் ரவாங் மருத்துவமனை அடுத்தாண்டு மத்தியில் செயல்படத் தொடங்கும்.
செல்கேட் கார்ப்ரேஷன் சென். பெர்ஹாட் (செல்கேட்) நிறுவனத்துடன் கூட்டமாக மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்திற்கான புதிய மேம்பாட்டாளரைத் நியமிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
முந்தைய குத்தகையாளருடனான ஒப்பந்தத்தை செல்கேட் ரத்து செய்த தைத் தொடர்ந்து புதிய குத்தகையாளரைத் தேர்ந்தெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
புதிய குத்தகையாளரை செல்கேட் நிறுவனம் அடுத்த மாதம் நியமிக்கும். அதன் பின்னர் கட்டுமானப் பணிகள் தொடரப்பட்டு ஓராண்டு காலத்தில் பணிகள் நிறைவு பெறும் என அவர் தெரிவித்தார்.
வரும் 2024ஆம் ஆண்டு மத்தியில் இந்த மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட வேண்டிய இந்த மருத்துவமனை அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறையினால் தாமதத்திற்குள்ளானது.
சுமார் 2.7 ஹெக்டர் நிலப்பரப்பில் கட்டப்படும் இந்த மருத்துவமனை ரவாங் மற்றும் கோம்பாக் வட்டாரத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 800,000 பேருக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.