Presiden Parti Keadilan Rakyat Datuk Seri Anwar Ibrahim berucap sebelum merasmikan Kongres Nasional Khas KEADILAN 2023 di Stadium Malawati, Shah Alam pada 18 Mac 2023. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI

ஒற்றுமை அரசாங்கம் வலுவாக உள்ளது, நாட்டை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்துகிறது- அன்வார்

ஷா ஆலம், மார்ச் 18- தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் வலுவாக இருக்கும் என்பதோடு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தொடர்ந்து ஆட்சியிலும் நிலைத்திருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இங்கு இன்று நடைபெறும் கெஅடிலான் கட்சியின் சிறப்பு பேராளர் மாநாட்டில் பிரதமர் என்ற முறையில் முதன் முறையாக உரையாற்றிய கட்சியின் தலைவருமான அவர், நான்கு மாதங்களுக்கு முன்னர் கூட்டாக அரசாங்கத்தை அமைத்த கட்சிகளின் வலுவான ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்த நம்பிக்கையை தாம் வெளிப்படுத்துவதாகச் சொன்னார்.

ஒரு அரசாங்கமாக ஐந்து ஆண்டுகளுக்கு நாம் நிலைத்திருக்க நமக்கு ஒருமித்த ஆதரவு தேவை. இதன் மூலமே இதுநாள் வரை ஏற்பட்ட பழுதுகளைக் சரி செய்து நாட்டையும் மக்களையும் உயர்த்த முடியும். இந்த அரசாங்கத்தை ஆட்டங் காணச் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்தபோதிலும் இந்த ஒற்றுமை அரசாங்கம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வலுவாக நிலைத்திருக்கும் என நம்புகிறேன் என அவர் தெரிவித்தார்.

இப்போது நமது கடமை என்னவென்றால் மடாணி முன்னெடுப்பு தீவிரமானதாகவும் பொருள் பொதிந்ததாகவும் இருப்பதை உறுதிசெய்ய போராட்ட உணர்வை வலுப்படுத்தி ரிபோர்மாசி சுடரை ஒளிரச்செய்வதாகும் என அவர் குறிப்பிட்டார்.

“மலேசியா மடாணி- ஒரு சித்தாந்தாத்தின் அமலாக்கம்“ எனும் கருப்பொருளைக் கொண்ட இந்த மாநாடு இங்குள்ள மெலாவத்தி அரங்கில் நடைபெறுகிறது. 

இந்த மாநாட்டில் கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி, கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசாத்தியோன் இஸ்மாயில், ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக்  ஆகியோருடன் 41 நாடுகளின் அரச தந்திரிகளும் கலந்து கொண்டனர்.


Pengarang :