ஷா ஆலம், மார்ச் 18- மக்களுக்கு சேவையாற்றுவது உள்பட எதிர்காலத்தில் நாடு எதிர்நோக்கக்கூடிய பெரிய சவால்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக கெஅடிலான் கட்சியைத் தொடர்ந்து வலுப்படுத்தும்படி அதன் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஒற்றுமை அரசாங்கத்திற்கு தலைமையேற்று வழிநடத்தும் கட்சி என்ற முறையில் இறைவன் வழங்கிய இந்த பெரிய பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசாத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
பட்டம், பதவி மற்றும் சொத்துகளுக்கு மதிமயங்கி விட வேண்டாம் என்பது அனைவருக்கும் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கிய கட்டளையாகும். இந்த கட்டளையை நாம் அனைவரும் மதித்து நடக்க வேண்டும். மக்களுக்கும் நாட்டிற்கும் ஆற்ற வேண்டிய மிகப்பெரிய கடமை நம் முன்னே இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இங்குள்ள மெலாவத்தி அரங்கில் இன்று நடைபெறும் கெஅடிலான் கட்சியின் 2023ஆம் ஆண்டு சிறப்பு மாநாட்டில் வரவேற்புரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கட்சி எதிர்நோக்கும் சோதனைகளுக்கு சவால்களுக்கும் முடிவு என்பது ஒருபோதும் கிடையாது. எனினும் கடந்து வந்த பாதையில் கிடைத்த அனுபவங்கள் கட்சிக்கு போதுமான அளவு முதிர்ச்சியை வழங்கியுள்ளது என்றார் அவர்.
கெஅடிலான் உண்மையில் அதிர்ஷ்டமிக்கது. அதன் வரலாற்றில் பலர் வந்து போன போதிலும் கட்சி தொடர்ந்து விசுவாசமான ஆதரவாளர்களைக் கொண்டுள்ளது. இதனால் நகரங்கள், கிராமங்கள் மற்றும் உட்புறப் பகுதிகளில் ஊடுருவியும் இன, மத, வயது வேறுபாடின்றி அனைவரின் ஆதரவையும் பெறும் அளவுக்கு ரிமோர்மாசி அலை இன்னும் வலுவாக உள்ளது என அவர் தெரிவித்தார்.