கிள்ளான், மார்ச் 31: சிலாங்கூர் வளமான வாழ்க்கை உதவிக்கான( பிங்காஸ்) 30,538 விண்ணப்பங்களை முழுமையான தகவல்களை கொண்டிருகாததால் மாநில அரசு நிராகரித்தது.
மார்ச் 29 வரை பெறப்பட்ட 71,160 விண்ணப்பங்களில் இருந்து நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்று சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்..
“சரியான முகவரியை வழங்காதது போன்று சில பிரச்சனைகளால் விண்ணப்பத்தை நிராகரித்தோம். விண்ணப்பம் நிராகரிக்கப் படுவதைத் தவிர்க்க, விண்ணப்பதாரர்கள் சரியான மற்றும் முழுமையான தகவல்களுடன் படிவத்தை நிரப்பி அனுப்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏனெனில் தேர்ச்சி பெறுபவர்கள் உண்மையிலேயே தகுதியானவர்களா என்பதை உறுதிப்படுத்த கவனமாக சோதனைகள் செய்யப்படுகின்றன,” என்று வி.கணபதிராவ் கூறினார். நேற்று விந்தம் அக்மார் ஹோட்டலில் பத்திரிக்கையாளர்களுடன் நோன்பு துறக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, கடந்த ஆண்டு ஜூலை தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த காசிஹ் இபு ஸ்மார்ட் சிலாங்கூர் (KISS) இன் புதிய குழு மற்றும் முன்னாள் பெறுநர்களான குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் இருந்து இதுவரை மொத்தம் 25,736 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.