புத்ராஜெயா, ஏப்ரல் 12 – முப்பது பொருட்களை உள்ளடக்கிய நோன்புப் பெருநாள் கால உச்சவரம்பு விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் இந்த சனிக்கிழமை முதல் ஏப்ரல் 30 வரை 16 நாட்களுக்கு செயல்படுத்தப்படும்.
கடந்தாண்டு பிப்ரவரி 5ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட விலை உச்சவரம்புத் திட்டத்தின் கீழ் வைக்கப்பட்ட கோழி மற்றும் முட்டை சார்ந்த ஆறு வகையான பொருள்களும் இந்த திட்டத்தில் உள்ளடங்கும் என்று உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுடின் ஆயோப் கூறினார்.
இவ்வாண்டு விலை கட்டுப்படுத்தப்பட்டப் பொருட்களில் உள்ளூர் மாட்டிறைச்சி, இறக்குமதி செய்யப்பட்ட மாட்டிறைச்சி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எருமை இறைச்சி, கெம்போங் மீன், செலாயாங் மீன், தக்காளி, சிவப்பு மிளகாய், இறக்குமதி செய்யப்பட்ட உருண்டை முட்டைக்கோஸ், நீண்ட பீன்ஸ், வெள்ளரி, கடுகு கீரை, இறக்குமதி செய்யப்பட்ட பழைய இஞ்சி, இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், பூண்டு, சீன பூண்டு, இந்திய சிவப்பு வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு, காய்ந்த மிளகாய், வேர்க்கடலை, தேங்காய் மற்றும் துருவிய தேங்காய் ஆகியவையும் அடங்கும் என்று அவர் சொன்னார்.
இந்த உச்சவரம் விலை அமலாக்க காலம் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பொருத்தமானது எனக் கூறிய அவர், பயனீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என்றார்.