ஜோர்ஜ் டவுன், ஏப் 14- பினாங்கு மற்றும் கெடாவுக்கான ஒரு நாள் வருகை மேற்கொண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பினாங்கு வந்து சேர்ந்தார்.
இன்று காலை 10.30 மணியளவில் சிறப்பு விமானத்தில் பினாங்கு அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த பிரதமரை மாநில முதலமைச்சர் சௌ கூன் இயோ மற்றும் மாநில பிரமுகர்கள் வரவேற்றனர்.
பினாங்கு ஆளுநர் துன் அகமது ஃபுஸி அப்துல் ரசாக்கை மரியாதை நிமித்தம் சந்திக்கும் பிரதமர் பின்னர் புக்கிட் மெர்தாஜம், கம்போங் பெங்குவாங் பள்ளிவாசல் மேம்பாட்டுப் பணிகளைத் தொடக்கி வைப்பார். அதன் பிறகு தாசேக் குளுகோர் ஜாராக் அத்தாஸ் பள்ளிவாசலில் நடைபெறும் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொள்வார்.
தொழுகைக்குப் பின்னர் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பினாங்கு கிளை வளாகத்திற்கு வருகை புரியும் அவர், கூட்டரசு மற்றும் மாநில அரசு பணியாளர்கள் மத்தியில் முக்கிய உரை நிகழ்த்துவார். அதோடு பினாங்கு அரசு மற்றும் பினாங்கு பூமிபுத்ரா மேம்பாட்டு மன்றம் வழங்கும் விளக்கமளிப்பிலும் கலந்து கொள்வார்.
இன்று மாலை அவர் உள்துறை அமைச்சின் ஏற்பாட்டில் கெடா, சுங்கை பட்டாணி அடிப்படை கொள்கை வகுப்பு பயிற்சி பள்ளியில் நடைபெறும் நோன்பு துறப்பு நிகழ்வில் பங்கேற்றப் பின்னர் கோலாலம்பூர் திரும்புவார்.