கோலாலம்பூர், ஏப்ரல் 15- நோன்புப் பெருநாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே 80 சதவீதத்திற்கும் அதிகமான குறைந்த கட்டண விமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.
கூடுதலாக ஒதுக்கப்பட் 11,400 இருக்கைகளில் சுமார் 82 சதவீதம் ஏப்ரல் 19 முதல் 22 வரையிலான பயணச்சேவைக்கு விற்கப்பட்டுள்ளது என்று ஏர் ஆசியா மலேசியா நிறுவனத்தின் தலைமைச் செயல் முறை அதிகாரி ரியாட் அஸ்மட் கூறினார்.
கோலாலம்பூர்-தாவாவ், ஜோகூர் பாரு-கூச்சிங், ஜோகூர் பாரு-சிபு மற்றும் கோலாலம்பூர்-கூச்சிங் ஆகியவை அதிக தேவை உள்ள வழித் தடங்களாகும் என்று அவர் சொன்னார்.
இருப்பினும், நிலையான குறைந்த கட்டண இருக்கைகள் இன்னும் உள்ளன. கோத்தா கினாபாலு மற்றும் ஜோகூர் பாருவுக்கான டிக்கெட்டுகள் விறுவிறுப்பாக விற்கப்படுகின்றன. மேலும் ஜோகூர் பாரு–கோத்தா கினாபாலு, பிந்துலு– கோலாலம்பூர், ஜோகூர் பாரு– கூச்சிங், மிரி– ஜோகூர் பாரு உள்ளிட்ட தடங்களுக்கான டிக்கெட்டுகள் இன்னும் விற்பனையில் உள்ளன என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
அதே நேரத்தில், ஏப்ரல் 28 முதல் மே 1 வரை காலக்கட்டத்திற்கான குறைந்த கட்டண சிறப்பு கூடுதல் விமானங்களுக்கான இருக்கைகள் இன்னும் உள்ளன என்றும் ரியாட் கூறினார்.
கடந்த மார்ச் 7 ஆம் தேதி, ஏப்ரல் 19 மற்றும் மே 1 க்கு இடைப்பட்ட காலத்திற்கு குறைந்த கட்டணத்தில் 124 கூடுதல் சிறப்பு விமானச் சேவைகளை ஏர் ஆசியா நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
இதற்கிடையில், புதிய குறைந்த கட்டண விமான நிறுவனமான மை ஏர்லைன்சின் இந்த பண்டிகைக் காலத்திற்கான அனைத்து இடங்களுக்கும் 85 முதல் 90 சதவீத டிக்கெட்டுகள் விற்கப்படுவிட்டன.
கோத்தா பாரு, தாவாவ் மற்றும் கோத்தா கினாபாலு ஆகிய தடங்களுக்கு இதுவரை அதிக தேவை இருந்ததாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி ரெய்னர் தியோ கூறினார்.
தற்போதைக்கு காலி இருக்கைகள் இன்னும் உள்ளன, ஆனால் அவை விரைவாக விற்பனையாகின்றன. ஏப்ரல் 19 முதல் 21 வரை கோலாலம்பூரில் இருந்து கோத்தா பாருவுக்கு இரண்டு கூடுதல் விமானங்களைச் சேர்ப்போம்.
நாங்கள் ஏற்கனவே கோலாலம்பூரிலிருந்து தாவாவ் நகருக்கான சேவையை தினசரி ஒரு பயணத்திலிருந்து இரண்டு பயணமாக அதிகரித்துள்ளோம் என்று அவர் கூறினார்.