ஷா ஆலம், ஏப் 15- சிலாங்கூரிலுள்ள சிறப்புக் குழந்தைகளின் திறனை மேம்படுத்துவதற்காக மாநில அரசு கல்வி உள்ளிட்ட திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
பிரத்தியேகச் சிறார் மேம்பாட்டுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 30 லட்சம் வெள்ளியிலிருந்து 50 லட்சம் வெள்ளியாக உயர்த்தப்பட்டது அச்சிறார்களின் மேம்பாட்டில் மாநில அரசு கொண்டுள்ள அக்கறையைப் புலப்படுத்துவதாக உள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அதோடு மட்டுமின்றி அனிஸ் எனப்படும் பிரதியேகச் சிறார்கள் இலாகாவையும் மாநில அரசு உருவாக்கியுள்ளது. இத்தகையக் குழந்தைகளின் நலன் காப்பதற்காக தனி இலாகாவை அமைத்த நாட்டின் முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.
இத்தரப்பினருக்கு பல்வேறு உதவிகளையும் பயிற்சிகளையும் வழங்கி அவர்களை திறன் பெற்ற தொழிலாளர்களாக உருவாக்குவதற்காக பல்வேறு திட்டங்களையும் மாநில அரசு அமல்படுத்தி வருகிறது என்றார் அவர்.
பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு ஊராட்சி மன்றப் பகுதியிலும் அனிஸ் பாலர் பள்ளிகளை அமைக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
ஐந்து மற்றும் ஆறு வயதான மாற்றுத் திறனாளி பிள்ளைகளுக்காக தினசரி பராமரிப்பு மையங்களை அமைக்கும் அரசின் நடவடிக்கை மாற்றுத் திறனாளி பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களின் சுமையை பெருமளவு குறைக்கும் என்றும் அவர் சொன்னார்.
ஷா ஆலம், செக்சன் 7இல் அமைக்கப்பட்ட முதலாவது அனிஸ் பாலர் பள்ளியில் பயில்வதற்கு 100 விண்ணப்பங்கள் கிடைத்துள்ள வேளையில் தற்போது 35 மாணவர்கள் அங்கு கல்வி பயின்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.