கோலாலம்பூர், ஏப் 15- நோன்புப் பெருநாள் சமயத்தில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் கையிருப்பு போதுமான அளவு இருக்கும் என உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு உறுதியளித்துள்ளது.
விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு மற்றும் அது சார்ந்த துறைகளான மீன்வள இலாகா, கால்நடை இலாகா, உணவு விநியோகத் துறையினருடன் நடத்தப்பட்ட சந்திப்பின் வாயிலாக இந்த உத்தரவாதம் அளிக்கப்படுவதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுடின் ஆயோப் கூறினார்.
நோன்புப் பெருநாள் சமயத்தில் உணவுப் பொருள் கையிருப்பு போதுமான அளவு உள்ளது. இது குறித்து யாரும் அச்சமடைய வேண்டாம். இதில் மாற்றம் ஏதும் இருந்தால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள பொருள்கள் குறித்த தகவலை அமைச்சு முன்கூட்டியே தெரிவிக்கும் என அவர் சொன்னார்.
எனினும், தற்போதைக்கு யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. பெருநாள் சமயத்தில் அதிகப் பொருள்களை வாங்கி சேமித்து வைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றார் அவர்.
இங்குள்ள பேரங்காடி ஒன்றில் 2023 நோன்புப் பெருநாள் விலை உச்சவரம்பு திட்ட அமலாக்கம் மீதான ஆய்வினை மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இவ்வாண்டு நோன்புப் பெருநாளை முன்னிட்டு இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை 30 வகையான அத்தியாவசிய உணவுப் பொருள்கள் உச்சவரம்பு விலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.