கோலாலம்பூர், ஏப் 21– இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் 11ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 5 கோடியே 20 லட்சம் வெள்ளி மதிப்பிலான பொருள்களை தீயில் அழிவதிலிருந்து கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை காப்பாற்றியுள்ளது.
கடந்த ஜனவரியில் 2 கோடியே 19 லட்சம் வெள்ளி சொத்துகளும் பிப்ரவரியில் 1 கோடியே 54 லட்சம் வெள்ளி சொத்துகளும் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் 11 வரை 26 லட்சம் வெள்ள மதிப்பிலான சொத்துகளும் காப்பற்றப்பட்டதாக மாநில தீயணைப்புத் துறை இயக்குநர் ஹம்டான் அலி கூறினார்.
இக்காலக்கட்டத்தில் நிகழ்ந்த தீவிபத்துகளில் 81 லட்சம் வெள்ளி மதிப்பிலான சொத்துகளும் வாகனங்களும் அழிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
தீவிபத்து தொடர்பில் 419 அழைப்புகளையும் மீட்பு பணிகள் தொடர்பில் 809 அழைப்புகளையும் இக்காலக்கட்டத்தில் தாங்கள் பெற்றதாக அவர் மேலும் சொன்னார்.
வெள்ளம், வாகன விபத்து உள்ளிட்ட பேரிடர்களிலிருந்து 330 பேரை தாங்கள் மீட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த காலக்கட்டத்தில் நிகழ்ந்த பேரிடர்களில் 26 பேர் பலியான வேளையில் மேலும் 66 பேர் காயங்களுக்குள்ளாயினர் என்றார் அவர்.
கடந்த நான்கு மாத காலத்தில் கோலாலம்பூர் தீயணைப்புத் துறை 1,234 அவசர அழைப்புகளைப் பெற்ற வேளையில் அவற்றில் இரண்டு போலியானவை என கண்டறியப்பட்டது என அவர் கூறினார்.