ஷா ஆலம், ஏப் 28- தென் பினாங்கு மேம்பாட்டுத் திட்டம் (பி.எஸ்.ஐ.) தொடர்பான மீனவர்களின் மனக்குறை மற்றும் ஆட்சேபங்களைத் தாம் கேட்க தயாராக உள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அந்த திட்டம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு சுற்றுச்சூழல் இடர் மதிப்பீட்டு அறிக்கையிடமிருந்து (இ.ஐ.ஏ.) நிபந்தனையுடன் கூடிய அனுமதி கிடைத்துள்ளதாக அவர் சொன்னார்.
அந்த திட்டத்திற்கு 71 நிபந்தனைகளுடன் இ.ஐ.ஏ. கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளது. ஆகவே, இது குறித்து நாங்கள் ஆராயவிருக்கிறோம். மீனவர்கள் மற்றும் வட்டார மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து நான் சில ஐயப்பாடுகளை எழுப்பியுள்ளேன் என்றார் அவர்.
இவ்விவகாரம் தொடர்பில் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் நாங்களும் மாநில அரசும் தீர்வுக்கான சில வழிகளை முன்வைப்போம் என்று அவர் தெரிவித்தார்.
அப்பகுதியில் பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் கடல் மீட்பு நடவடிக்கை தங்கள் வருமானத்திற்கும் கடல் வளங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி பினாங்கு மீனவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
எனினும், இந்த பி.எஸ்.ஐ. திட்டத்திற்கு புத்ரா சுற்றுச்சூழல் துறையின் இ.ஐ.ஏ. அறிக்கை 71 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளதாக பினாங்கு முதல்வர் சாவ் கூன் இயோ கூறியிருந்தார்.