சிப்பாங், ஏப் 29- இங்கு நேற்றிரவு நடைபெற்ற ஜெலாஜா கித்தா சிலாங்கூர்
அய்டில்பித்ரி நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் பல இன, சமய
மற்றும் வாழ்க்கைப் பின்னணியைக் கொண்ட பத்தாயிரத்திற்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பாசீர் சாலாக் பாசார் மாலாம் வளாகத்தில் நடைபெற்ற இந்த உபசரிப்பில்
கலந்து கொள்ளவதன் மூலம் தன் மகளுக்கு புதிய அனுபவத்தை
வழங்குவதற்காக சைபர் ஜெயாவிலிருந்து தாம் வந்ததாக ஜஸ்டின்
(வயது 40) கூறினார்.
மாநில அரசின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நோன்பு பெருநாள் பொது
உபசரிப்பின் மகிழ்ச்சியில் தன் மகளும் பங்கேற்க வேண்டும் என்பது தமது
விருப்பாகும் என கணக்காய்வாளரான அவர் சொன்னார்.
தந்தை என்ற முறையில் இது எனது கடமையாகும் என்று விருந்து
நிகழ்வின் போது சிலாங்கூர் கினிக்கு அளித்த பேட்டியில் அவர்
குறிப்பிட்டார்.
மாநில அரசின் ஏற்பாட்டிலான இத்தகைய விருந்து நிகழ்வில் தன்
கணவருடன் கலந்து கொள்வது இதுவே முதன் முறையாகும் என்று நுர்
அனிஸ் அக்கிலான புஹாரி (வயது 25) தெரிவித்தார்.
இங்கு பல்வேறு வகையான உணவுப் பதார்த்தங்கள் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தன. எதை எடுப்பது என்று தெரியவில்லை என்று அவர்
சொன்னார்.
இதனிடையே, ஒவ்வோராண்டும் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில்
கலந்து கொள்ள மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தாம் வருவது
வழக்கம் என்று பொருள் பட்டுவாடா நிறுவனத்தின் அதிகாரியான ஜோசப்
(வயது 49) கூறினார்.