சுபாங் ஜெயா, மே 5- நேற்று இங்கு நடைபெற்ற ஸ்ரீ செர்டாங் தொகுதி நிலையிலான நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் பல இனங்களையும் சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த உபசரிப்பில் 500க்கும் மேற்பட்ட சிறார்களுக்கு நோன்புப் பெருநாள் ரொக்க அன்பளிப்புகள் வழங்கப்பட்டதோடு அதிர்ஷ்டக் குலுக்கில் வென்ற 75 பேருக்கு உணவுப் பொருள் கூடைகள் மற்றும் மின்சாரப் பொருள்கள் வழங்கப்பட்டன என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
பொது உபசரிப்பில் கலந்து கொண்டவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. பொது மக்களின் வசதிக்காக 28 உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டு விருந்தினர்கள் தங்களுக்குத் தேவையான உணவுகளை எடுத்துக் கொள்வதற்குரிய வாய்ப்பு வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விருந்தில் தக்காளிச் சோறு, மீ ரெபுஸ், சாத்தேக் தவிர்த்து மலாய் பாரம்பரிய உணவுகளான லெமாங், கெத்துபாட், ரெண்டாம் போன்ற உணவுகளும் பரிமாறப்பட்டன என்று அவர் சொன்னார்.
இந்த விருந்து நிகழ்வில் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பின் யீன் மற்றும் சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் துணை டத்தோ பண்டார் முகமது ஜூல்கர்னாய்ன் சே அலி ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.