ஷா ஆலம், மே 5- கோல லங்காட், தாமான் பெர்வீரா சிஜாங்காங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொள்ள பொது மக்களுக்கு மந்திரி புசார் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஜெலாஜா கித்தா சிலாங்கூர் அய்டில்பித்ரி நிகழ்வு இரவு 8.00 மணி முதல் 11.00 மணி வரை நடைபெறும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த பொது உபசரிப்பு நிகழ்வில் குடும்பத்தினருடன் கலந்து சிறப்பிக்கும் படி பொது மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
இன்று 5ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை உலு லங்காட், பெட்டாலிங் மற்றும் கோல லங்காட் ஆகிய மூன்று மாவட்டங்களில் மாநில அரசின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு நடைபெறவுள்ளது.
ஜெலாஜா கித்தா சிலாங்கூர் அய்டில்பித்ரி எனும் இந்நிகழ்வு நாளை 5ஆம் தேதி உலு லங்காட் தாமான் ஸ்ரீ நண்டிங் அகோரா இரவுச் சந்தை பகுதியிலும் பெட்டாலிங் 6ஆம் தேதி பெட்டாலிங் மாவட்டத்தின் சுங்கை பூலோ இரவுச் சந்தை பகுதியிலும் 7ஆம் தேதி கோல லங்காட், சிஜாங்காங் தாமான் பெர்வீராவிலும் நடைபெறும்.
இது தவிர இம் மாதம் 12ஆம் தேதி சபாக் பெர்ணம், டத்தாரான் தானா லேசேன் பகுதியிலும் 13ஆம் தேதி கோல சிலாங்கூர் பொது மைதானத்திலும் 14ஆம் தேதி ஆப் டவுன் ஸ்ரீ கோம்பாக்கிலும் இந்த உபசரிப்பு நிகழ்வு நடைபெறும். ஸ்ரீ கோம்பாக்கில் நடைபெறும் விருந்து நிகழ்வில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்வார்.
இந்த நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு தொடரின் முதல் மூன்று நிகழ்வுகள் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி சிப்பாங், உலு சிலாங்கூர் மற்றும் கிள்ளானில் நடைபெற்றது.