MEDIA STATEMENT

வீட்டில் ஏற்பட்ட தீயில் மாற்றுத்திறனாளி கருகி மரணம்- ரவாங்கில் சம்பவம்

ஷா ஆலம், மே 27- ரவாங், டேசா கன்றி ஹோம்ஸ் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீயில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படும் ஆடவர் ஒருவர் கருகி மாண்டார்.

ஐம்பத்தாறு வயதுடைய அந்த மாற்றுத்திறனாளி நபர் தன் அண்ணனுடன் அந்த வீட்டில் வசித்து வந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் ஹபிஷாம் முகமது நோர் கூறினார்.

இந்த தீ விபத்து தொடர்பில் அதிகாலை 6.28 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து ரவாங் மற்றும் பத்து ஆராங் தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்புக் குழுவினர் எட்டு நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்ததாக அவர் சொன்னார்.

அந்த இரட்டை மாடி வரிசை வீட்டின் அறை ஒன்றில் அந்த ஆடவரின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே பொது மக்கள் தீயை அணைத்து விட்டனர் என அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தில் 65 வயதுடைய அந்த மாற்றுத் திறனாளியின் அண்ணன் காயமின்றி உயிர் தப்பியதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :