குளுவாங், மே 29- டுரியான் பழங்களை வாங்குவது போல் பாசாங்கு செய்து சுமா 80 கிலோ பழங்களுடன் ஆடவர் ஒருவர் தனது வாகனத்தில் தப்பியோடினார். இச்சம்பவம் இங்குள்ள மார்டி சாலைச் சுற்றுவட்டம் அருகே கடந்த வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்தது.
வணிகரிடமிருந்து பழங்களை வாங்கியப் பின்னர் தனது நான்கு சக்கர இயக்க வாகனத்திலிருந்து பணத்தை எடுத்து வருவதாக கூறிச் சென்ற 40 வயது மதிக்கத்தக்க அந்த ஆசாமி, பழங்களுடன் மின்னல் வேகத்தில் பறந்தார்.
எனினும், அந்த ஆசாமியின் மகிழ்ச்சி நீண்ட நேரத்திற்கு நீடிக்கவில்லை. போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் மறுநாள் விடியற்காலை 12.30 மணியளவில் தாமான் டேசா பைடுரியில் அவ்வாடவர் கையும் களவுமாகச் சிக்கினார்.
டுரியான் கடையின் பணியாளரை அணுகிய அந்த சந்தேகப்பேர்ழி தாம் டுரியான் பழங்களை மொத்தமாக வாங்க விரும்புவதாக கூறியதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் பாஹ்ரின் முகமது நோர் கூறினார்.
அந்த பணியாளரும் தனது முதலாளியைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்துள்ளார். 2,500 வெள்ளிக்கு அனைத்துப் பழங்களையும் விற்க முதலாளி சம்மதிக்கவே அந்நபர் பழங்களை தனது வாகனத்தில் ஏற்றியுள்ளார். பின்னர் காரிலிருந்து பணத்தை எடுப்பது போல் பாசாங்கு செய்த அவ்வாடவர் சட்டெனக் காரில் ஏறி பறந்துள்ளார் என அவர் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் கிடைத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவ்வாடவர் கைது செய்யப்பட்டதாக கூறி பாஹ்ரின், அவ்வாடவர் மீது நான்கு குற்றப்பதிவுகளும் போதைப் பொருள் தொடர்பான ஆறு பதிவுகளும் உள்ளதாகச் சொன்னார்