MEDIA STATEMENTSELANGOR

காதலியை 18 முறை கத்தியால் குத்திக் கொன்ற இந்தியப் பிரஜை கைது

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 10- பொறாமை காரணமாக தன் காதலியை 18 முறை பழம் வெட்டும் கத்தியால் குத்திக் கொன்ற இந்திய பிரஜையை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் கிளானா ஜெயாவிலுள்ள ஆடம்பட அடுக்குமாடி குடியிருப்பு  ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்தது.

கொலை நிகழ்ந்த மறுநாள் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் சாலாக் செலத்தானில் உள்ள இ.ஆர்.எல். மின்சார இரயில் தடத்தில் நுழைய முயன்ற அவ்வாடவனை உதவி போலீஸ் பிரிவு உறுப்பினர்கள் தடத்து நிறுத்திய போது இந்த சம்பவம் அம்பலத்திற்கு வந்தது.

இரயில் தடத்தில் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக போலீசில் ஒப்படைக்கப்பட்ட அந்த ஆடவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 40 வயதுடைய இந்தியப் பிஜையான தனது காதலியை  கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி அதிகாலை 4.00 மணிக்கும் 6.00 மணிக்கும் இடையே கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபக்ருடின் அப்துல் ஹமிட் கூறினார்.

தங்களுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த மற்றொரு ஆடவருடன் தொடர்பிருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் ஏற்பட்ட தகராற்றில் அப்பெண்ணை சந்தேகப் பேர்வழி கொலை செய்ததாக அவர் சொன்னார்.

அச்சந்தேகப் பேர்வழியின் வீட்டை போலீசார் சோதனையிட்ட போது அறை ஒன்றில் இரத்த வெள்ளத்தில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதை அவர்கள் கண்டதாக முகமது ஃபக்ருடின் தெரிவித்தார்.

இந்தியாவில் திருமணமான அப்பெண்ணுக்கு பிள்ளைகள் இருப்பதும் சுற்றுலா விசாவில் மூன்று மாதங்களுக்கு முன்னர் இங்கு வந்த அவர் டாமன்சாராவில் உள்ள சிகையலங்கரிப்பு  நிலையத்தில் வேலை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார் அவர்.


Pengarang :