ஈப்போ, ஜூன் 29- தாப்பா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் வேலி மற்றும் பாதுகாவலர் சாவடியை கொள்கலன் லாரி மோதிய சம்பவத்தில் காயமுற்ற போலீஸ்காரர் உடல் நிலை சீராக உள்ளது.
சரவா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதுடைய அந்த போலீஸ்காரர் மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதிக்கப் பட்டதோடு தற்போது அவர் மருத்துவ விடுமுறையில் உள்ளார் என்று பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி ஹசான் கூறினார்.
அந்த போலீஸ்காரரை தாம் நேற்று தாப்பா மருத்துவமனையில் சென்று கண்டதாகவும் அவருக்கு சொற்ப காயங்களே ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டு தற்போது மருத்துவ விடுப்பில் இருந்து வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்
அந்த விபத்தினால் ஏற்பட்ட சேதங்களைக் கண்டறிய தாம் துறைத் தலைவர்களுடன் தாப்பா மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு நேற்று சென்றதாக கூறிய அவர், அந்த காவல் நிலையத்தின் வேலி மற்றும் பாதுகாவலர் சாவடிக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதை தாம் கண்டறிந்ததாக சொன்னார்.
இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை தயார் செய்து தங்களுக்கு அனுப்பும்படி தாப்பா மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று விடியற்காலை 1.25 மணியளவில் கொள்கலன் லோரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாப்பா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் வேலி மற்றும் பாதுகாவலர் சாவடியை மோதியதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் காயமுற்றார்.