கோலாலம்பூர், ஜூன் 30- மருத்துவமனைகளிலும் பொது போக்குவரத்து வாகனங்களிலும் முகக்கவரி அணிவது வரும் ஜூலை 5ஆம் தேதி முதல் கட்டாயமல்ல என்ற அறிவிப்பு கோவிட்-19 எண்டமிக் கட்டத்தை அடைய நாடு தயாராக உள்ளதை புலப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
முகக்கவசம் தொடர்பாக சீரான செயலாக்க நடைமுறையை (எஸ்.ஒ.பி.) தளர்த்துவது தொடர்பாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா வெளியிட்டுள்ள அறிவிப்பை மலேசியர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிப்போர் முகக் கவரி அணிவது கட்டாயமல்ல என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்று என டிப்ளோமா மாணவரான ஆர்.அரசி நேசி (வயது 21) கூறினார்.
நாடு கோவிட்-19 பெரும் தொற்றிலிருந்து விடுபட்டு வருவதை அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு மறைமுகமாக உணர்த்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
நிலைமை சீராக இல்லாவிட்டால், அரசாங்கம் நிச்சயமாக இந்த விதிமுறை தளர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருக்காது. எல்.ஆர்.டி. அல்லது எம்.ஆர்.டி. இரயில்களில் எப்போதும் கூட்ட நெரிசல் காணப்படும். அத்தகையச் சூழல்களில் முகக்கவரி அணிந்திருப்பது மிகவும் சிரமமாக இருக்கும். இனிமேல் அந்த பிரச்சனை இருக்காது என்று அவர் சொன்னார்.
மலேசியா எண்டமிக் கட்டத்திற்கு மாறுவதாக கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி அறிவிக்கப்பட்டது.
மருத்துவமனைகளில் அமல்படுத்தப்பட்ட எஸ்.ஒ.பி. விதிகளை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என இனி அஞ்ச வேண்டியதில்லை என்று அனைத்துலகப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் லிசா லிக்சன் (வயது 25) கூறினார்.
முகக்கவரி இனியும் அணிய வேண்டியதில்லை என்று அறிவிப்பு வரவேற்கத்தக்கது. முகக்கவரி அணிவது தனிப்பட்ட நபர்களின் தேவையைப் பொறுத்ததாகும் என அவர் சொன்னார்.