ஷா ஆலம், ஜூன் 30- அரசாங்க உயர் கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல உதவும் விமான டிக்கெட் கட்டண உதவி நிதித் திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும்.
தீபகற்ப மலேசியாவில் உள்ள அரசாங்க உயர் கல்விக் கூடங்களில் பயிலும் சபா மற்றும் சரவாக் மாணவர்கள் மற்றும் அம் மாநிலங்களில் பயிலும் தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
விமான டிக்கெட் வாங்குவதற்கு ஏதுவாக இந்த உதவித் தொகையை சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கி கணக்கில் சேர்த்து விடுவோம். இது தொடர்பான செயல்முறை தற்போது உருவாக்கப்பட்டு வருவதோடு இதில் விமான நிறுவனங்களின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது என்று அவர் சொன்னார்.
இந்த திட்டத்தை ஆகஸ்ட் மாதம், அதாவது தேசிய தினத்திற்கு முன்னதாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாண்டில் அரசாங்க உயர் கல்வி மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்றார் அவர்.
இந்த திட்டத்தின் வாயிலாக விமான நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கட்டண கழிவு வழங்கும். பெருநாள் அல்லது விடுமுறையின் பொது சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் மாணவர்களின் சுமையை இத்திட்டம் ஓரளவு குறைக்கும் என அவர் குறிப்பிட்டார்.