MEDIA STATEMENTNATIONAL

வீட்டில் தீ- உறங்கிக் கொண்டிருந்த குழந்தை பரிதாப மரணம்

பட்டர்வெர்த், ஜூலை 10- அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த வீட்டின் அறையில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இச்சம்பவம் இங்குள்ள தாமான் பந்தாய் பெர்சேவில் நேற்று காலை நிகழ்ந்ததாக பட்டர்வெர்த் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை அதிகாரி முகமது நாசீர் இட்ரிஸ் கூறினார்.

நான்கு மாடி மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியிலுள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பில் தமது தரப்பு நேற்று காலை 9.29 மணியளவில் தகவலைப் பெற்றதாக அவர் சொன்னார்.

இந்த அழைப்பைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு 900 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டில் ஏற்பட்ட தீயை அவர்கள் வெற்றிகரமாக கட்டுப்பட்டிற்குள் கொண்டு வந்தனர் என அவர் குறிப்பிட்டார்.

அந்த வீட்டின் 20 விழுக்காடு அதாவது 100 சதுர அடி பகுதி தீயில் பாதிக்கப்பட்ட வேளையில் பாதிப்புக்குள்ளான அந்த அறையில் இரண்டு வயது குழந்தை இருப்பதாக எங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அந்த அறையைச் சோதனையிட்ட போது அக்குழந்தை இறந்து நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது என்று பெர்மானாவுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.

பின்னர் அக்குழந்தையின் உடல்  பரிசோதனைக்காக செபராங் ஜெயா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது என்று அவர் மேலும் சொன்னார்.

இந்த விபத்துக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக அவர் கூறினார்.


Pengarang :