ECONOMYMEDIA STATEMENT

ஹராப்பான்- பாரிசான் கூட்டணியின் வேட்பாளர் பட்டியல், தேர்தல் கொள்கையறிக்கை இம்மாத இறுதியில் வெளியிடப்படும்

ஷா ஆலம், ஜூலை 16- பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணியின் வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் கொள்கையறிக்கை இம்மாதம் 25 அல்லது 26 ஆம் தேதி வெளியிடப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அவ்விரு கூட்டணிகளின் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு இன்னும் விவாத நிலையில் உள்ளதாகவும் வரும் ஜூலை 29 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய படுவதற்கு முன்னர் அப்பட்டியல் இறுதி செய்யப்பட்டு விடும் என்றும் சிலாங்கூர் மாநில ஹராப்பான் தலைவருமான அவர் தெரிவித்தார்.

வேட்பாளர் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. (வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்கு) வரும் ஜூலை 25 அல்லது 26 ஆம் தேதி வரை காத்திருக்கிறோம். வழக்கம் போல் சில சீரமைப்புகள், மாற்றங்கள் , மறு ஆய்வுகள் செய்யப் படலாம் என்றார் அவர்.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் வெற்றிக்கு அடிப்படை சூட்சமமாக வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களை தொகுதிகளில் நிறுத்த விரும்புகிறோம் என அவர் மேலும் சொன்னார்.

நேற்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் ஒற்றுமை அரசாங்கத்தின் தேர்தல் திட்டமிடல் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இக்கூட்டத்தில் சிலாங்கூர் தேசிய முன்னணித் தலைவர் டத்தோ மெகாட் ஜூல்கர்னாய்ன் ஒமாருடினும் கலந்து கொண்டார்.

வரும் மாநிலத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக ஒரே தொகுதியில் பக்கத்தான் ஹராப்பானும் தேசிய முன்னணியும்  தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்தாது என்றும் அமிருடின் வாக்குறுதியளித்தார்.

ஒவ்வொரு தொகுதியிலும் இந்த கூட்டணியைப் பிரதிநிதித்து ஒரே வேட்பாளர் மட்டுமே போட்டியிடுவார் என்பதால் எந்த வேட்பாளருக்கு வாக்ளிப்பது என்ற குழப்பம் வாக்காளர்களுக்கு ஏற்படாது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :