ஷா ஆலம், ஜூலை 16- இங்குள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் அண்மையில் 10 வயது சிறுமி ஒருவர் மரணமடைந்தது தொடர்பில் இரு புகார்களைப் போலீசார் பெற்றுள்ளனர்.
மருத்துவமனை நிர்வாகம் மற்றும் உயிரிழந்த சிறுமியின் தந்தை ஆகியோரிடமிருந்து அவ்விரு புகார்களும் பெறப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
இப்புகார்கள் தொடர்பில் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 32(1)(ஏ) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் வாசியான அந்த பத்து வயதுச் சிறுமியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கிள்ளான் மருத்துவனைக்கு கொண்டு சென்றதும் சிகிச்சையின் போது அவர் உயிரிழந்ததாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்கள் வழி வைரலான இந்த விவகாரம் பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. என்று அவர் சொன்னார்.
இவ்விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் மற்றும் இறந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்களின் அடிப்படையில் விரிவான, முழுமையான, நியாயமான மற்றும் பாகுபாடற்ற விசாரணை நடத்தும்.. அரச மலேசிய போலீஸ் படை விசாரணையை மேற்கொள்வதில் யாருடைய உரிமையும் மறுக்காது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஊகங்களை வெளியிட வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக் கொண்ட அவர், இச்சம்பவம் தொடர்பில் தகவல் உள்ளவர்கள் 03-55142222 அல்லது 019-6422985 என்ற எண்களில் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நதாலி அனாக் அலினுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.