கோலா பெராங், ஜூலை 19 – ஆறு மாநிலத் தேர்தல்களை முன்னிட்டு வரும் ஆகஸ்டு 8 ஆம் தேதி நடைபெறும் தொடக்க வாக்குப்பதிவின் போது மொத்தம் 49,660 ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது மனைவிகள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று துணை பாதுகாப்பு அமைச்சர் அட்லி ஜஹாரி தெரிவித்தார்.
இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் துணைவியர் வாக்களிப்பதற்கு ஏதுவாக அந்த ஆறு மாநிலங்களிலும் 54 வாக்குச் சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைக்கும் என்று அவர் சொன்னார்.
கிளந்தானில் ஆறு வாக்களிப்பு மையங்களும் கெடா,நெகிரி செம்பிலான், பினாங்கு மற்றும் திரங்கானுவில் தலா எட்டு மையங்களும், சிலாங்கூரில் 16 மையங்களும் திறக்கப்படும்.
அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அவர்களது துணைவியரோடு வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.
நேற்று இங்குள்ள தாசேக் கென்யிரில் படைவீரர் பராமரிப்பு திட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
இந்நிகழ்வில் மலேசிய ஆயுதப் படையின், படைவீரர் விவகாரத் துறை இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் ஜாம்பேரி ஜெஃப்ரி டேரஸூம் கலந்து கொண்டார்.
மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 29 ஆம் தேதியும் வாக்குப்பதிவு ஆகஸ்டு 12ம் ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.