ஆறு மலேசியா மாநிலங்கள் தேர்தல்களுக்கு தயாராகி விட்ட, இவ்வேளையில், நமது சமூகத்தை எல்லாவித அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்து மேம்பாட்டு இலக்கை நோக்கி அழைத்து செல்ல இந்தியத் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும்.
இந்திய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு உடனடி நடவடிக்கை தேவைப்படுவதால், அரைகுறையான வாக்குறுதிகளுக்கு காலம் முடிந்துவிட்டது. நாட்டில் உள்ள இந்தியர்களின் நல்வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முன்னேற்றத்திற்கான முன்னெடுப்பாக எங்கள் அழைப்பினை உரக்க தெளிவாக வெளியிடுகிறோம். அதை புறக்கணிக்க வேண்டாம் !
.இது மாற்றத்திற்கான நேரம் ! பக்காத்தான் ஹராப்பான் மற்றும் மஇகாவைச் சேர்ந்தவர்கள் உள்பட அனைத்து இந்தியத் தலைவர்கள், தன்னார்வ நிறுவனம் மற்றும் சமூகத் தலைவர்கள் ஒன்றுபட்டு, நமது சமூகத்தை உயர்த்த உறுதியுடன் செயல் படுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். இன்று நாம் இடும் அடித்தளம், வருங்காலத் தலைமுறையினரின் சிறந்த எதிர் காலத்திற்கு வழி வகுக்கும்.
மலேசியா இந்தியர்கள், வளமான கலாச்சார பாரம்பரியத்தை கொண்டுள்ளனர். நமது தேசத்தை கட்டியெழுப்பும் செயல்பாட்டில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறோம். ஆனால் நமது பெரும் பங்களிப்புகள் இந்தியர்களின் சமூகப் பொருளாதார பிரச்சனைக்கு தீர்வாக வில்லை.
இந்தியர்களிடையே வேலையின்மை, தரமான கல்விக்கான அணுகல் இன்னும் ஒரு பிரச்சனையாக உள்ளது. மேலும் பல துறைகளில் அதிக பிரதிநிதித்துவமும், செயற்பாடும் அவசரமாக தேவைப் படுகிறது.
இனி அரசாங்கத்துடன் தீவிரமாக செயல் படுவதன் மூலமே, சமூகத்திற்கு நன்மை பயக்கும் திட்டங்களை வடிவமைக்க முடியும்.
குறிப்பாக, சிலாங்கூரில் உள்ள இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை பெற இதுவே நல்ல தருணம். நம்மிடையே ஒன்றுப்பட்ட நல்ல ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வுகள் இந்தியர்களின் சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்க ஒற்றுமை அரசாங்கத்துக்கு உதவும்.
அரசியல் ஒற்றுமை வழி மஇகா தலைவர்கள் உட்பட அனைவரின் ஒப்புதலுடன், ஒரு வருடத்திற்குள் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதாகப் பிரதமர் அளித்து வரும் உறுதிமொழி நமக்கு நம்பிக்கை அளிக்கிறது
நாம் ஒன்று படுவதன் மூலம் இந்த தருணத்தை பயன்படுத்தி நமது எண்ணத்திற்கு செயல்வடிவம் அளிப்போம்.
இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேறுவது உறுதி செய்வதற்கான அரசியல் விருப்பமும், உறுதியும் நமக்குத் தேவை.
அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு கூட்டு சக்தியாக இருப்பதன் மூலம் இந்தியத் தலைவர்கள் ஒற்றுமை அரசாங்கத்துடன் தீவிரமாகச் செயல்பட்டு, தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கொள்கைகளை வடிவமைக்க மதிப்புமிக்க நுண்ணறிவுகளை நாம் பயன்படுத்த வேண்டும்.