SELANGOR

கோத்தா கெமுனிங் ஹராப்பான் வேட்பாளர் பிரகாஷூக்கு ஸ்ரீ மூடா பொது அமைப்புகள் ஆதரவு

ஷா ஆலம், ஜூலை 26- எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி
நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் கோத்தா கெமுனிங் தொகுதியில்
பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் சார்பில் போட்டியிடவிருக்கும்
பிரகாஷ் சாம்புநாதனுக்கு ஸ்ரீ மூடா வட்டார அரசியல் கட்சிகள் மற்றும்
பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

ஜசெக சார்பில் களம் காணும் இந்த புதுமுக வேட்பாளரின் வெற்றியை
உறுதி செய்வதில் தாங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக
அவர்கள் வாக்குறுதியளித்தனர்.

நேற்று இங்குள்ள தாமான் ஸ்ரீமூடா அஸாலியா மண்டபத்தில்
நடைபெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின்
பிரதிநிதிகளுடனான சந்திப்பு நிகழ்வில் இந்த ஆதரவை அவர்கள்
புலப்படுத்தினர்.

கோத்தா கெமுனிங் தொகுதியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினரும் மாநில
ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ.கணபதிராவ், ஷா ஆலம் மாநகர் மன்ற
உறுப்பினரும் பந்திங் தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான்
வேட்பாளருமான வீ.பாப்பாராய்டு, ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர்
ராமு நடராஜன் உள்பட திரளானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து ஸ்ரீ மூடா ருக்குன் தெத்தாங்கா பிரிவுகள், ஸ்ரீமூடா
சிறுவணிகர்கள் சங்கம், குடியிருப்பாளர் சங்கங்கள், ஸ்ரீ மூடா ஸ்ரீ மகா
மாரியம்மன் ஆலயம், புக்கிட் கெமுனிங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்,
என்.ஜி.ஒ. பொது அமைப்புகள், பிகேஆர். ஜசெக, அமானா கட்சிகளின்
தலைவர்கள் பிரகாஷ் வேட்பாளராக நியமிக்கப்பட்டதை தாங்கள்
வரவேற்பதோடு அவருக்கு இத்தேர்தலில் முழு ஆதரவையும்
வழங்குவதாக ஒருமித்தக் குரலில் கூறினர்.

இத்தொகுதியில் போட்டியிடும் தமக்கு முழு ஆதரவை வழங்கிய
அனைத்து அமைப்புகளின் பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்
கொண்ட பிரகாஷ், வாக்கு சேகரிப்பதற்கு தங்கள் பகுதிக்கு வரும்படி
அவர்கள் விடுத்த அழைப்பையும் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார்.


Pengarang :