ELMEDIA STATEMENTSELANGOR

மந்திரி புசார் வேட்பாளரை பெரிக்காத்தான் நேஷனல் ஏன் அறிவிக்கவில்லை- அமிருடின் வியப்பு

ஷா ஆலம், ஆக 5- மந்திரி புசார் வேட்பாளர் யார் என்பதை இன்னும் அறிவிக்காமல் இருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் போக்கு குறித்து சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி வியப்பு தெரிவித்துள்ளார்.

தங்கள் கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்ட பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ மொடிகின் யாசின் மந்திரி புசார் யார் என்பதை அறிவிக்காமல் இருப்பது வியப்பளிப்பதாக உள்ளது என்று ஹராப்பான்- பாரிசான் கூட்டணியின் மந்திரி புசார் வேட்பாளராக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் அமிருடின் சொன்னார்.

சிலாங்கூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் கொள்கை அறிக்கையை மொகிதீன் வெளியிடுவது ஏன்? மந்திரி புசார் வேட்பாளராக அஸ்மின் அலி பெயர் குறிப்பிடப்படுவதை பாஸ் கட்சி விரும்பவில்லையா? என அவர்  கேள்வி எழுப்பினார்.

மந்திரி புசார் வேட்பாளரை பெர்சத்து கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்க மொகிதீன் விரும்புவதாகவும் எனினும் அந்த வேட்பாளர் பெயரை அவர் வேண்டுமென்ற மறைப்பதாகவும் கூறப்படுகிறது.

மந்திரி புசார் வேட்பாளராக அஸ்மின் அலியின் பெயர் அடிபடும் நிலையில் சிலாங்கூர் பாஸ் கட்சித் தலைவர்கள் அதில் உடன்படவில்லை எனக் கூறப்படுகிறது. அஸ்மினை விட சிறந்த வேட்பாளர்கள் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

மந்திரி புசார் பதவிக்கு சிஜாங்காங் வேட்பாளர் டத்தோ டாக்டர் யூனுஸ் ஹைரியை மந்திரி புசார் வேட்பாளராக பாஸ் கட்சியின் சிலாங்கூர் மாநில இளைஞர் பிரிவு பரிந்துரைத்துள்ளது.

மந்திரி புசார் பதவிக்கு மேலும் பல திறமையான வேட்பாளர்கள் உள்ளனர் என்று கட்சியின் மூத்த தலைவர்களான இஸ்கந்தர் அப்துல் சமாட் மற்றும் ரோஸ்லான் முகமது ஷஹிர் ஆகியோர் கூறியிருந்தனர்.


Pengarang :