ECONOMYMEDIA STATEMENTSELANGOR

ஆட்சிக்குழுவில் இடம் இல்லாவிட்டாலும்  மாநில மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றுவேன்-குணராஜ் உறுதி

கிள்ளான், ஆக 23- ஆட்சிக் குழுவில் இடமில்லை என்றாலும் மாநில மக்களுக்கான தனது சேவை தொடரும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் உறுதிபடக் கூறினார்.

 சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தல் அண்மையில் நடைபெற்று முடிந்தது. டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி மந்திரி புசாராக மீண்டும் பதவியேற்றுள்ளார். 

அவரின் தலைமையில் 10 ஆட்சிக் உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். இனி இந்த விவகாரத்தில் அதிருப்திகளை வெளிப்படுத்தி எந்தவொரு பயனும் இல்லை.

அதே வேளையில் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.மேலும் நம்பிக்கை கூட்டணியும் தேசிய முன்னணியும் இணைந்து சிலாங்கூர் மாநிலத்தில் ஆட்சியமைத்துள்ளன.தேர்தல் காலத்தில் மாநில மக்களின் நலனுக்காக பல வாக்குறுதிகளும் வழங்கப்பட்டது.

அடுத்த தேர்தலில் ஆட்சியைத் தற்காக்க வேண்டும் என்றால் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மக்களுக்கு உரிய சேவைகளை வழங்க வேண்டும். இந்த விவகாரங்களில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று குணராஜ் கேட்டுக் கொண்டார்.


Pengarang :