ஷா ஆலம், ஆக 30- சிலாங்கூரில் உள்ள தாபிஸ் மையங்கள் மற்றும் தனியார் சமயப் பள்ளிகள் மூடப்பட்டதாகக் கூறப்படும் அவதூறு தொடர்பான விசாரணையை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை மேற்கொண்டு வருகிறது.
அவதூறு தொடர்பாக பேராக் மாநிலத்தில் மூன்று புகார்களை காவல் துறை பெற்றுள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.
மூன்று புகார்கள் கிடைத்துள்ளன புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இதன் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளது. பேராக்கில் கிடைத்த புகார்களின் பேரில் 1948ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின் 4 வது பிரிவின் கீழ் புக்கிட் அமான் விசாரணையைத் தொடங்கியது என்று அவர் கூறினார்.
சமயப் பள்ளிகளுக்கு எதிராக அவதூறு பரப்பும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் நேற்று காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகள் பெற்றோர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் உள்ள சமய கல்வி நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கையை சிதைத்து விட்டது என அவர் கூறியிருந்தார்.
இத்தகைய அவதூறுகளைப் பரப்பும் கும்பல்களை உடனடியாக கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையை கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
உண்மையில், பதிவு செய்யப்படாத தனியார் மற்றும் தனியார் சமய மற்றும் தாபிஸ் பள்ளிகளை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நான்தான் உத்தரவிட்டிருந்தேன். இந்தப் பள்ளிகள் பாதுகாப்பாக இருப்பதையும் மாணவர்கள் கல்வியைப் பெறுவதற்கு வசதியானச் சூழலைக் கொண்டிருப்பதையும் உறுதி செய்வதற்கு இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று மேன்மை தங்கிய சுல்தான் கூறியிருந்தார்.