சிரம்பான், ஆக 31 – நெகிரி செம்பிலான் மாநில பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணி, பார்ட்டி அமானா நெகாராவுக்கு (அமானா) மாநில சட்டமன்ற சபாநாயகர் பதவியை வழங்க கொள்கையளவில் ஒப்புக்கொண்டது.
அதேசமயம், துணை சபாநாயகர் பதவி பிகேஆர் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நேற்று இங்கு மாநில ஆட்சிக்குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண் இதனை உறுதிப்படுத்தினார்.
சபாநாயகர் பதவிக்கான வாக்கெடுப்பு வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி மாநில சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தின்போது நடைபெறும் என்றும் அதனுடன் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவும் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
சட்டமன்றக் கூட்டம் மற்றும் பதவியேற்பு விழாவுக்கு நெகிரி செம்பிலானின் யாங் டி-பெர்த்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம் என்று அமினுடின் சொன்னார்.
இதற்கிடையில், நான்கு நாட்கள் நீடிக்கும் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரை வரும் அக்டோபர் 9 ஆம் தேதி தொடக்கி வைப்பதற்கு துவாங்கு முஹ்ரிஸ் ஒப்புக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
– பெர்னாமா