MEDIA STATEMENTNATIONAL

ஆட்சியாளர்களுக்கு எதிராக அவதூறு- இரு ஆடவர்கள் கைது

ஷா ஆலம், செப் 1- ஆட்சியாளர்களை நிந்திக்கும் வகையிலான கருத்துகளை வெளியிட்டது தொடர்பில் இரு ஆடவர்களை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

அவதூறு பரப்பும் நோக்கில் நிந்தனைக்குரிய கருத்துகளை பதிவேற்றம் செய்த காரணத்திற்காக உள்நாட்டினரான அவ்விரு ஆடவர்களும் வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ சுஹைலி ஜைன் கூறினார்.

அந்த நிந்தனைக்குரிய கருத்துகள் அவதூறானவையாகவும் ஆட்சியாளர்களுக்கு விசுவாசத்தை காட்டாத வகையிலும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஜோகூர் சுல்தானுக்கு எதிராக அவதூறான கருத்துகளை வெளியிட்டதற்காக “பிளட் ஏர்த் மலேசியா“ எனும் பேஸ்புக் பக்கத்தின் நடத்துநர் அல்லது உரிமையாளரான 41 வயது நபர் ஈப்போ, கம்போங் சுங்கை கட்டிலில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

“இமாம் முஸ்தாகின்“ என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தைக் கொண்டிருக்கும் 47 வயது நபர், சிலாங்கூர் சுல்தானை ஏளனப்படுத்தும் வகையிலான கருத்துகளை பதிவேற்றம் செய்தது தொடர்பில் பேராக் மாநிலத்தின் லங்காப்பில் கைது செய்யப்பட்டார் என அவர் கூறினார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 117வது பிரிவின் கீழ் அவ்விருவரையும் விசாரணைக்காக ஆகஸ்டு 31 முதல் செப்டம்பர் 2 வரை தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற ஆணையைத் தாங்கள் பெற்றுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :