கோலாலம்பூர், செப் 2 – சிரம்பான் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேசிய தினப் பேரணி அணிவகுப்பின் போது மயங்கி விழுந்து மரணமடைந்த மக்கள் தன்னார்வப் படை (ரேலா) உறுப்பினரான முகமது நோ முகமது ஈசாவின் குடும்பத்திற்கு மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா அனுதாபம் தெரிவித்துள்ளார்.
ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியாவும் அக் குடும்பத்தினருக்கு அரச இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்
முகமது நோவின் மறைவுக்கு அரச தம்பதியர் தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தினர். மேலும் இந்த கடினமான காலகட்டத்தில் மன உறுதியுடனும் துயரிலிருந்து விடுபடவும் தாங்கள் இறைவனைப் பிரார்த்திப்பதாக அவர்கள் இஸ்தானா நெகாராவின் முகநூல் பக்கத்தில் குறிப் பிட்டுள்ளனர் .
நெகிரி செம்பிலான் மாநில அளவிலான 66 வது தேசிய தின கொண்டாட்டத்தையொட்டி நேற்று முன்தினம் டத்தாரான் மஜ்லிஸ் பண்டராயா சிரம்பானில் நடைபெற்ற பேரணி நிகழ்ச்சியில் முகமது நோ மயங்கி விழுந்தார்.
நெகிரி செம்பிலான் ரேலா குழுத் தலைவரான 53 வயது முகமது நோ, நெகிரி செம்பிலானில் உள்ள துவாங்கு ஜாஃபர் மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் இறந்து விட்டது அங்கு உறுதிப் படுத்தப் பட்டது.
– பெர்னாமா