ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பூலாய் இடைத் தேர்தல்- 927 காவல் துறையினர் நாளை வாக்களிப்பர்

ஜோகூர் பாரு, செப் 4- நாளை நடைபெறும் பூலாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான தொடக்கக் கட்ட வாக்களிப்பில் 927 போலீஸ் அதிகாரிகளும் உறுப்பினர்களும் வாக்களிக்கவுள்ளனர்.

கெம்பாஸ் போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட நடவடிக்கை அறையில் 46 பேர் வாக்களிக்கவுள்ள நிலையில் விலாயா 2, கடல் போலீஸ் துறைத் தளத்திதின் நுசான்தாரா மண்டபத்தில் மேலும் 881 பேர் வாக்களிப்பர் என்பதை தேர்தல் ஆணையத்தின் தரவுகள் காட்டுகின்றன.

அவ்விரு வாக்களிப்பு மையங்களும் நாளை காலை 8.00 மணிக்குத் திறக்கப்படும். எனினும், கெம்பாஸ் போலீஸ் நிலையத்தில் வாக்களிப்பு மதியம் 12.00 மணி வரை மட்டுமே நடைபெறும்.விலாயா 2, கடல் போலீஸ் துறைத் தளத்தில் மாலை 5.00 மணி வரை வாக்களிப்பு நடைபெறும். 

பூலாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சருமான டத்தோஸ்ரீ சலாவுடின் ஆயோப் கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அந்த நாடாளுமன்றத் தொகுதியிலும் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சிம்பாங் ஜெராம் தொகுதியிலும் இடைத் தேர்தல் வரும் சனிக்கிழமை  நடைபெறுகிறது.


Pengarang :