MEDIA STATEMENTSELANGOR

 புக்கிட் கெமுனிங், ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய ஏற்பாட்டில் மக்கள் பிரதிநிதிகள் கௌரவிப்பு

ஷா ஆலம், செப் 16- நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு சிறப்பு வழிபாட்டுடன் கூடிய கௌரவிப்பு நிகழ்வை புக்கிட் கெமுனிங் 8வது மைல், ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம் நேற்று நடத்தியது.

இந்த நிகழ்வில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், பந்திங் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ. பாப்பாராய்டு, கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்புநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற அந்த மூன்று தலைவர்களுக்கும் ஆலயத்தின் சார்பாக மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. 

இந்த சிறப்பு நிகழ்வில் உரையாற்றிய ஆலயத் தலைவர் டத்தோ அ. ஜோ சரவணன், அண்மையத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வேட்பாளர்களை கௌரவிக்கும் நோக்கில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறினார்.

மேலும், வட்டார அரசு சாரா அமைப்புகள் மற்றும் பொது இயக்கங்களின் பிரதிநிதிகளுக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே அறிமுகத்தை ஏற்படுத்திக் கொள்வதையும் வட்டாரப் பிரச்சனைகளை தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுச் செல்வதையும் இந்த நிகழ்வு நோக்கமாக கொண்டிருந்தது என்று அவர் சொன்னார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய கணபதிராவ், பாப்பாராய்டு, பிரகாஷ் ஆகியோர் இந்த சிறப்பு வழிபாட்டை ஏற்பாடு செய்த ஆலய நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். 

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதிலும் அவர்களின் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுப்பதிலும் தாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வரவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த நிகழ்வி கலந்து கொண்ட அரசு சாரா அமைப்புகள் மற்றும் பொது இயக்கங்களின் பிரதிநிதிகள் தலைவர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.


Pengarang :