ஷா ஆலம், செப் 24- கடனைத் திரும்பச் செலுத்தும் இயக்கத்தின் வாயிலாக 20,000 வெள்ளி வரையிலான பரிசுகளை வெல்வதற்குரிய அரிய வாய்ப்பினை ஹிஜ்ரா தொழில்முனைவோருக்கு யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் வழங்குகிறது.
இவ்வாண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் இந்த இயக்கத்தில் ஹிஜ்ரா அறவாரியத்தில் கடன் பெற்ற அனைவரும் இயல்பாக பங்கேற்பதற்குரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஹிஜ்ரா தொழில்முனைவோர் வாராந்திர மற்றும் மாதாந்திர முறையில் கடனைத் திரும்பச் செலுத்தும் நடைமுறையை ஹிஜ்ரா தகவல் தொழில்நுட்ப முறையின் வாயிலாக இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கண்காணித்து வருவர் என்று அவ்வாரியம் கூறியது.
கடனுக்கான தவணைப் பணத்தை வாராந்திர அல்லது மாதாந்திர அடிப்படையில் சீராகவும் முறையாகவும் எந்த பாக்கியுமின்றியும் செலுத்தும் தொழில்முனைவோர் இந்த அதிர்ஷ்டக் குலுக்கில் பங்கேற்பதற்குரிய வாய்ப்பினைப் பெறுவர் என அது தனது பேஸ்புக் பதிவில் குறிப்பட்டது.
இந்த அதிர்ஷ்டக்குலுக்கு இரு பிரிவுகளாக நடத்தப்படும் என்றும் 30,000 வெள்ளிக்கும் குறைவாக கடன் பெற்றவர்கள் முதல் பிரிவிலும் 31,000 வெள்ளிக்கும் மேல் கடன் பெற்றவர்கள் இரண்டாம் பிரிவிலும் இடம் பெறுவர் என்றும் அவ்வாரியம் தெரிவித்தது.
இந்த போட்டியின் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான குலுக்கல் முதல் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு டிசம்பர் 27ஆம் தேதியும் இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு டிசம்பர் 28ஆம் தேதியும் நடைபெறும். இந்த குலுக்கல் நிகழ்வு ஹிஜ்ரா பேஸ்புக் லைஃப் மற்றும் யுடியூப் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.