சிரம்பான், செப் 30- தங்கள் பகுதியில் நிலவும் காற்றின் தரம் மீது மிகுந்த கவனப்போக்கைக் கொண்டிருக்கும்படி பொதுமக்களை குறிப்பாக நோய் ஆபத்து அதிகம் உள்ளத் தரப்பினரை நெகிரி செம்பிலான் மாநில சுகாதார இலாகா கேட்டுக் கொண்டுள்ளது.
புகை மூட்டப் பிரச்சனையினால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாவதைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம் என்று மாநில சுகாதரத் துறை இயக்குநர் டாக்டர் ஹர்லினா அப்துல் ரஷிட் கூறினார்.
வெளியிடங்களில் உடற்பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகளைத் மேற்கொள்வதைக் குறைப்பது மற்றும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ள பகுதிகளை தவிர்ப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தேசிய புகைமூட்ட நடவடிக்கை செயல்திட்டத்திற்கேற்ப காற்று மாசுக் குறியீடு (ஐ.பி.யு.) 100ஐத் தாண்டும் பட்சத்தில் வெளிப்புற நடவடிக்கைகளை பொது மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இத்தகைய சூழல்களின் எப்போதும் கட்டிடங்களுக்கு உள்ளே இருக்க வேண்டும். வெளியில் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் பொருத்தமான முகக் கவசம் அணிய வேண்டும். இது தவிர உடலில் நீர்ச் சத்து குறையாமலிருக்க தினசரி குறைந்தது எட்டு கிளாஸ் நீரை அருந்த வேண்டும் என்றார் அவர்.
சுவாச மற்றும் இருதய பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ள சிறார்களின் விஷயத்தில் அதிகம் கவனம் தேவை எனக் கூறிய அவர், புகைமூட்டப் பிரச்சனையினால் அத்தரப்பினர் எளிதில் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளது என்றார்