செய்தி .சு.சுப்பையா
ஷா ஆலம்.அக்.22- நீரிழிவு, இரத்த அழுத்த நோயால் அவதியுறும் ஏழை குடும்பங்களை சேர்ந்த B 40 பிரிவு 110 பேருக்கு மருத்துவ பரி சோதனைக் கருவிகள் இலவசமாக வழங்கப் பட்டது. ஷா ஆலம் தொகுதிக்கு பிரதமர் துறை இலாகாவின் கீழ் இயங்கும் மித்ரா வழங்கிய நிதியுதவியுடன், இந்த மருத்துவ நலம் சார்ந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த மருத்துவ தளவாடப் பொருட்களை ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹஜி அஸ்லி யுசோப் எடுத்து வழங்கினார்.
மித்ராவின் வழி இத்தகைய சிறப்பான சேவை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த மித்ரா தலைவர் டத்தோ இரமணன் இராமகிருஷ்ணனுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் இந் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு இந்தியர் விவகார அதிகாரியும் இத்தொகுதியில் சிறப்பாக சேவையாற்றி வரும் ஏற்பாட்டுக் குழுவினர் ஆர்.டி.சரவணன் மற்றும் நாதனை மற்றும் வெகுவாக பாராட்டினார்.
ஷா ஆலம் தொகுதியின் பல்வேறு பகுதியிலிருந்து வருகை தந்து நீரிழிவு பரிசோதனை கருவிகளை பெற்றுக் கொண்ட B 40 பிரிவை சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, மருத்துவ கருவிகளை பெற்றுக் கொண்டவர்களை அடிக்கடி இரத்த பரிசோதனையை முறையாக செய்துக் கொள்ளும் படி கேட்டுக் கொண்டார்.
கடுமையான வேலை செய்த காலத்தில், இப்படிப்பட்ட நோய்கள் நம்மை தாக்கவில்லை. ஆனால் இன்றைய வாழ்க்கை சூழல் பல்வேறு நோய்களை எதிர் நோக்க வேண்டியிருக்கிறது. ஷா ஆலம் மக்களளுக்கு வழங்கப்பட்ட இப்பொருட்களை முறையாக பயன்படுத்தும் படி அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட முதியவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது. அனைவருக்கும் இரத்த பரிசோதனை, சிறு நீர் பரிசோதனை நடத்தப்பட்டது. சைபர் ஜெயாவை சேர்ந்த செஹாட் கிளினிகை சேர்ந்த 7 பேர் கொண்ட மருத்துவகுழுவுக்கு மருத்துவர் ஜெயசந்திரன் தலைமை ஏற்றார். இந்த இலவச மருத்துவ பரிசோதனையை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 12.00 வரை நடத்தினர்.
இலவசமாக வழங்கப் பட்ட இந்த மருத்துவ பரிசோதனை கருவிகள் 5 ஆண்டுகளுக்கு உத்தரவாதம் கொண்டது என்பது குறிப்பிட தக்கது.