காஜாங், நவ 3 – தீபாவளிக்கான பண்டிகைக் கால அதிகபட்ச விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவுத் துறை அமைச்சு நவம்பர் 6ஆம் தேதி அறிவிக்கவுள்ளது.
எதிர்வரும் தீபாவளியின் போது பண்டிகைப் பொருட்களின் தேவையின் அடிப்படையில் அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்படும் என துணையமைச்சர் பவுஸியா சாலே கூறினார்.
வழக்கமாக தீபாவளி போன்ற பெருநாள்களுக்குத் தேவைப்படும் அடிப்படைப் பொருட்களுக்கு உச்ச வரம்பு விலையை நிர்ணயப் செய்வோம். இவை சீன புத்தாண்டை விட வேறுபட்டப் பொருள்களாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
நாங்கள் தீபாவளிக்கு முன்னும் பின்னும் ஏழு நாட்களுக்கு விலைக் கட்டுப்பாட்டை அமல்படுத்துவோம். மேலும் அனைத்து வர்த்தக இடங்களையும் தொடர்ந்து கண்காணிப்போம் என்று இன்று காஜாங் சந்தையில் கோழியின் விலையை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
கோழியின் விலை சந்தையின் தேவைக்கேற்ப நிர்ணயிக்கப்படுவது குறித்து கருத்துரைத்த அவர், இந்த நடைமுறையை அமைச்சு கண்காணித்து வணிகர்களும் உற்பத்தியாளர்களும் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யும் என்றார்.
பொருள்கள் கண்மூடித்தனமாக விலை உயர்வு காணாமலிருப்பதை உறுதி செய்வதற்காக விலைக் கட்டுப்பாடு மற்றும் ஆதாய எதிர்ப்புச் சட்டம் 2011 இன் கீழ் சோதனை நடத்துவதற்காக நாடு முழுவதும் 2,200க்கும் மேற்பட்ட அமலாக்கப் பணியாளர்களை அமைச்சு பணியமர்த்தியுள்ளது என அவர் தெரிவித்தார்.