கோத்தா டாமன்சாரா நவ.10- கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் இசுவான் காசிம் ஏற்பாட்டில் சிலாங்கூர் ஏசான் ராஹ்மா விற்பனை சந்தை சிறப்பாக நடைபெற்றது. மத்திய அரசின் ராமா விற்பனை சந்தை, வசதி குறைந்தவர்களுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. மத்திய அரசின் இத்திட்டத்தை சிலாங்கூர் மாநில மக்களுக்கு கிடைக்க வேண்டி இத்திட்டம் டாமன்சாரா சட்டமன்ற மற்றும் சுங்கை பூலோ நாடாளுமன்றமும் இணைந்து ஏற்பாடு செய்தது.
காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 வரை ஏசான் ராஹ்மா விற்பனை சந்தை நடைபெற்றது. கோத்தா டாமன்சாரா மக்கள் காலை 7.30 மணிக்கே மண்டபத்திற்குள் குவிய தொடங்கி விட்டனர்.
ஏற்பாட்டாளர்கள் முறையாக நன்கு திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த ஏசான் ராஹ்மா விற்பனை சந்தையில் அரிசி, சமையல் எண்ணெய், கோழி, ஆட்டு இறைச்சி, எருமை மாட்டிறைச்சி, மீன் வகைகள், இறால், முட்டை, கோதுமை மாவு, மீஹுன், சோஸ் வகைகள் என்று ஏறக்குறைய 15 வகை அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் விற்கப்பட்டன.
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகம் நேரடியாக அனைத்து பொருட்களையும் கொண்டு வந்தது.
காலை 9.00 மணிக்கு குறிப்பிட்டது போல விற்பனை தொடங்கியது. கோத்தா டாமன்சார சட்ட மன்ற அலுவலக தலைவர், சிவராசா அலுவலக அதிகாரி நவின், கோத்தா டாமன்சாரா இந்திய சமுதாயத் தலைவர் திருமதி தேவி ஆகியோர் ஏற்பாடு வேலைகளை சிறப்பாக வழிநடத்தினர்.
தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் இசுவான் காசிம் காலை 9.30 மணிக்கு மண்டபத்திற்கு வருகை தந்தார். விற்பனை சந்தையில் கலந்து கொண்டவர்களோடு நலம் விசாரித்தோடு ஏற்பாடு வேலைகளையும் கண்காணித்தார்.
மொத்தம் 250 பேருக்கு பொருட்கள் விற்பனை சந்தையில் கொண்டு வரப் பட்டிருந்தது. 500 கோழிகளும், 250 போத்தல்கள் கொண்ட 5 கிலோ சமையல் எண்ணெய், அரிசி மற்றும் இதர பொருட்கள் விற்கப்பட்டது.
இந்த விற்பனை சந்தைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மக்கள் அரசு திட்டங்களுக்கு பெரும் ஆதரவு கொடுக்கின்றனர். இதனால் இந்த விற்பனை சந்தை தொடர்ந்து ஏற்பாடு செய்யப்படும் என்று சட்ட மன்ற உறுப்பினர் இசுவான் காசிம் தெரிவித்தார்.