ரொம்பின், நவ 16- குவாந்தான்- ஜோகூர் பாரு சாலையின் 137வது கிலோ மீட்டரில் ரொம்பின் அருகே நேற்று நிகழ்ந்த மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இரவு மணி 9.30 அளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் நிசான் அல்மிரா காரின் ஓட்டுநர் மற்றும் பயணியான முகமது ரஹ்மாட் முகமது ரஹிம் (வயது 34) மற்றும் முகமது அமிருள் முக்மினி மாட் டாவுட் (வயது 31) ஆகிய இருவரும் பலத்தக் காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யாஹ்யா ஓத்மான் கூறினார்.
குவாந்தானிலிருந்து ஜோகூர் பாரு நோக்கி சென்று கொண்டிருந்த அவ்விருவரும் பயணம் செய்த கார் சாலை சந்திப்பு ஒன்றில் வலது புறம் திரும்புவதற்காக காத்திருந்த போது பின்னால் வந்த நிசான் ரக லோரி அதனை மோதியதாக அவர் சொன்னார்.
இந்த மோதல் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த அக்கார் எதிர்த்தடத்தில் நுழைந்தது. அப்போது எதிரே வந்து கொண்டிருந்த சிமெண்ட் கலவை லோரி அக்காரை மோதித் தள்ளியது. இந்த மோதல் காரணமாக காரில் இருந்த இருவரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர் என்றார் அவர்.
இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட இரு லோரிகளின் ஓட்டுநர்களும் தலையில் காயங்களுக்குள்ளானதாக கூறிய அவர், இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தித்தின் 41(1) வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.