சான்பிரான்சிஸ்கோ, நவ.17- ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் மாநாட்டில் காஸா விவகாரம் மீது புருணை, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் உறுதியான மற்றும் பொதுவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த விஷயத்தில் இந்தோனேசியா, மலேசியா மற்றும் புருணை ஆகிய நாடுகள் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் இருப்பது குறித்து நான் பெருமைப்படுகிறேன்.
மாட்சிமை தங்கிய புருணை சுல்தான் (சுல்தான் ஹசனல் போல்கியா) மத்திய கிழக்கில் நிகழ்ந்து வரும் மோதலைத் தொட்டுப் பேசினார். இந்தோனேசிய அதிபர் ஜோகோவி காஸாவில் நிகழும் அட்டூழியங்கள் குறித்து தமது உரையில் குறிப்பிட்டார் என்று நேற்று தனது அமெரிக்கப் பயணத்தின் முடிவில் மலேசிய செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
ரஷ்யா மற்றும் உக்ரேன் சம்பந்தப்பட்ட புவிசார் அரசியல் பிரச்சினை தொடர்பில் அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட ஒரு பத்தி மீது ஏற்கனவே எதிர்பார்க்கப் பட்டதைப் போலவே ஏபெக் பொருளாதார நாடுகள் ஒருமித்த கருத்தை எட்டத் தவறிவிட்டன.
கடந்த நவம்பர் 14 முதல் நவம்பர் 17 வரை நடைபெற்ற 30வது ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபெக் ) பொருளாதார தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அன்வார் நவம்பர் 13ஆம் தேதி இங்கு வந்தார்.
இந்த புவிசார் அரசியல் பிரச்சனை ஏபெக் தளத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் மலேசியா, ஒருமித்த கருத்து கொண்ட பொருளாதார நாடுகளுடன் விவாதித்து காஸாவில் மனிதாபிமான நெருக்கடி பற்றிய ஒரு பத்தியை அறிமுகப்படுத்த ஒப்புக்கொண்டது
அதே நேரத்தில், ஏபெக் மாநாட்டில் காஸா மனிதாபிமான நெருக்கடி பற்றிய விவாதங்களில் உறுதியான நிலைப்பாட்டையும் தெளிவான கருத்துக்களையும் வெளிப்படுத்தும் கூட்டு அறிக்கையை மலேசியா, புருணை மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் வெளியிடும்