ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பத்து தீகா, உலு பெர்ணம், டெங்கில் தொகுதிகளில் இன்று மாநில அரசின் மலிவு விற்பனை

ஷா ஆலம், நவ 24- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்
(பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்று
மேலும் மூன்று இடங்களில் நடைபெறவுள்ளது.
ஷா ஆலம் செக்சன் 20, போலீஸ் குவார்ட்டர்ஸ் (பத்து தீகா தொகுதி), உலு
சிலாங்கூர், களும்பாங் பொது மைதானம் (உலு பெர்ணம் தொகுதி) மற்றும்
தாமான் புத்ரா பெர்டனா, ஜாலான் பி.பி.1ஏ புத்ரா பெர்டானா சமூக
மண்டபம் ( டெங்கில் தொகுதி ) ஆகிய இடங்களில் காலை 10.00 மணி
தொடங்கி இந்த மலிவு விற்பனை நடைபெறும்.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட்
முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00
வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ
சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 13.00
வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு
கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம்
முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு
விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர்
பயனடைந்துள்ளனர்.
நோன்புப் பெருநாளின் போது கோழி மற்றும் முட்டையை மலிவு
விலையில் மிக அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்ததற்காக
பி.கே.பி.எஸ். மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.
ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை
பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள
கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அறியலாம்.

Pengarang :