புத்ராஜெயா, நவ 27 – மக்கள் நலனுக்காக முன்னெடுக்கப்பட்டத் திட்டங்கள் தொடரப்படுவதை உறுதி செய்ய அடுத்த பொதுத் தேர்தலிலிலும் வெற்றியைத் தக்கவைக்க வைத்துக் கொள்வதை ஒற்றுமை அரசின் உறுப்புக் கட்சிகள் உறுதி செய்ய வேண்டும் என்று கெஅடிலான் ராக்யாட் கட்சியின் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் கூறினார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் சபா மாநிலத் தேர்தலுடன் இந்த வேகம் தொடங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
நமது முதல் பொதுத் தேர்தல் வெற்றி ஷெரட்டோன் நகர்வின் மூலம் (2020ஆம் ஆண்டு) பறிக்கப்பட்டது. இந்த வெற்றி (ஒற்றுமை அரசாங்கத்தின் உருவாக்கம்) ஒத்துழைப்பு வாயிலாக அடையப்பட்டது என்றார் அவர்.
புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற கெஅடிலான் கட்சியின் 2023ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
சபா தேர்தல் உட்பட அடுத்து வரும் தேர்தல்களில் நாம் வெற்றிபெறவில்லை என்றால் நமது திட்டங்களைத் தொடர முடியாது போகும் என்று அவர் எச்சரித்தார்.
கட்சி உறுப்பினர்கள் வெளியில் இருந்து மட்டுமின்றி பி.கே.ஆர். கட்சிக்குள்ளும் அவதூறு கலாச்சாரத்தைத் தடுக்க வேண்டும். ஏனெனில் பல ஆண்டுகளாகப் பாடுபட்டு உருவாக்கிய கட்சியின் வெற்றியை அது கொன்றுவிடும் என்று பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கு மாநில கெஅடிலான் தலைமைத்துவ மன்றத்தின் தலைவருமான நூருல் இசா சொன்னார்.
கெஅடிலான் கட்சியின் கடந்த 25 ஆண்டு காலப் போராட்டம், மக்களின் உரிமைக்கான மற்றும் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான இஸ்லாமிய போதனைகளின்படியே அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த பொதுத் தேர்தலில் கிழக்கு கரை மாநில வாக்காளர்களின் மனதைக் கவர்வதில் ஒருபோதும் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று கட்சித் தலைமைத்துவம் மற்றும் தேர்தல் இயந்திரங்களை கெஅடிலான் உதவித் தலைவரும் இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சருமான நிக் நஸ்மி நிக் அகமது வலியுறுத்தினார்.