ஜகார்த்தா, டிச 4: இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள மராபி எரிமலை ஞாயிற்றுக்கிழமை அன்று வெடித்ததில் குறைந்தது 11 மலை ஏறுபவர்கள் இறந்தனர் மற்றும் 12 பேரை காணவில்லை என அறியப் படுகிறது.
இந்த வெடிப்பு காரணமாகப் பல பகுதிகளில் சாம்பல் மழை பெய்ததாக ஜெர்மன் செய்தி நிறுவனம் (டிபிஏ) தெரிவித்துள்ளது.
வெடிப்புக்குப் பிறகு குறைந்தது 49 மலை ஏறுபவர்கள் பத்திரமாகக் கீழே இறங்கினர். மேலும் சிலரைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தேடல் மற்றும் மீட்பு முகமைத் தலைவர் அப்துல் மாலிக் கூறினார்.
“மொத்தம் 11 பேர் இறந்து விட்டனர்,” என்று அவர் கூறினார்.
2,891 மீட்டர் உயரமுள்ள எரிமலை பல மாதங்கள் குமுறிய பின் ஞாயிற்றுக்கிழமை கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு வெடித்ததாக தேசிய பேரிடர் தணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து எரிமலை வெடித்த முனையிலிருந்து மூன்று கிலோமீட்டர் வரை தடுப்பு பகுதிகளாக அதிகாரிகள் மாற்றினர்.
மராபி சுமத்ராவில் மிகவும் ஆபத்தான எரிமலைகளில் ஒன்றாகும். இது கடைசியாக 2018 இல் வெடித்தது.
– பெர்னாமா-டிபிஏ