ஷா ஆலம், டிச 7- டாமன்சாரா டாமாயில் நேற்று காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட ஆட்டிஸம் குறைபாடு கொண்ட சிறுவன் குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள நீரோடையில் இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டான்.
அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட குடியிருப்பாளர்கள் இரவு 10.00 மணியளவில் ஜைய்ன் ராய்யான் மாட்டின் (வயது 6) என்ற அந்த சிறுவனின் உடலைக் கண்டு பிடித்தனர்.
டாமன்சாரா டாமாய், இடாமான் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலுள்ள நீரோடையில் அச்சிறுவனின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது.
அச்சிறுவனின் உடல் கண்டு பிடிக்கப்பட்டதை சம்பவ இடத்தில் இருந்த பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஃபாக்ருடின் அப்துல் ஹமிட் உறுதிப்படுத்தினார்.
அச்சிறுவனின் உடல் இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டதால் அவரின் மரணம் குறித்து இப்போதைக்கு எதுவும் கூற இயலாது. சம்பவ இடத்தில் நாங்கள் சோதனை மேற்கொண்டு வருகிறோம் என அவர் சொன்னார்.
நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடிக்கு சென்று கொண்டிருந்த போது தன் மகன் காணாமல் போனதை அவரின் தாயார் உணர்ந்தார்.